January 26, 2019 தண்டோரா குழு
நாட்டின் 70 வது குடியரசுத் தின விழாவையடுத்து டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடி ஏற்றினார்.
மாநிலங்களின் தலைநகரில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடினர். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராம்நாத் கோவிந்த் கொடி ஏற்றியதை தொடர்ந்து ராஜ்பத் முதல் செங்கோட்டை வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்.குடியரசு தின விழா அணிவகுப்பில் தேசத் தந்தை மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்க நாட்டில் இனப்பாகுபாடு காரணமாக ரயிலில் அவமதிக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்டவை தத்ரூபமாக இடம் பெற்றது.மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார வண்டிகளும் ஊர்வலத்தில் இடம் பெற்றுள்ளன.
முன்னதாக டெல்லி அமர்ஜவான் ஜோதியில், பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். உயிர் நீத்த வீரர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர்,ராஜ்பாத் பகுதிக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அதைத்தொடர்ந்து குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வருகை தந்தார். குடியரசு தலைவருடன், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா வருகை தந்தார். இருவரையும் பிரதமர் மோடி வரவேற்றார். ரமபோசாவுக்கு முப்படை தளபதிகளை அறிமுகம் செய்து வைத்தார் மோடி.
இதனைத் தொடர்ந்து, நாட்டை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தேசத்தை பாதுகாக்கும் பணியில் உயிர் நீத்த நசீர் வானிக்கான அசோக் சக்ரா விருதை, நசீர் வானியின் மனைவியிடம் வழங்கினார் குடியரசு தலைவர். ராணுவத்தில் லான்ஸ் நாயக்காக பணியாற்றிய நசீர் வானிக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. காஷ்மீரை சேர்ந்த ஒருவர் அசோக் சக்ரா விருது பெறுவது இதுவே முதல் முறையாகும்.
குடியரசுத்தின விழாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். குடியரசுத் தின விழாவையொட்டி டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.