December 14, 2018
தண்டோரா குழு
வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றுப்படுகையில் இன்று யானைகள் சிறப்பு நல்வாழ்வு புத்துணர்வு முகாம் தொடங்குகியது.
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பரிவு காட்டும் விதமாக மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டும் தோறும் நடந்து வருகிறது. இம்முகாம் தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள் மற்றும் திருமடங்களைச்சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் 4 ஆண்டுகளும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் 6 ஆண்டுகளும் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 11″வது ஆண்டு யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் வழக்கம்போல் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. முகாமில் முகாம் அலுவலகம், பாகன்கள் தங்குமிடம் பாகன்கள் ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கு தனித்தனியாக மருத்துவ கொட்டகைகள், யானைகள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. யானைகளை குளிக்க வைப்பதற்காக குளியல் மேடை ஷவர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகளின் நடமாட்டத்தைக்கண்காணிக்க முகாமைச்சுற்றிலும் வனப்பகுதியொட்டி 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் முகாமிற்குள் காட்டு யானைகள் புகுந்து விடுவதைத்தடுக்க முகாமைச்சுற்றிலும் 1 1/2″கிலோ மீட்டர் தூரத்திற்கு சூரியமின்வேலி தொங்கு மின்வேலிகள் சீரியல் லைட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 14″இடங்களில் சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இரவு நேரத்திலும் ஒளி விட்டுப்பிரகாசிக்க சக்தி வாய்ந்த மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்குப் பின்னர் சந்தித்த மகிழ்ச்சியில் யானைகள் ஒன்றுக்கொன்று தும்பிக்கையால் தழுவி மகிழ்ந்து விளையாடின. முகாமிற்கு யானைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகள்மற்றும் முகாம்நடைபெறும் தேக்கம்பட்டி சாலையில் வனத்துறையினர் இரவுபகல் யானை பாதுகாப்பு படை வாகனம் மூலம் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட உள்ளனர்.
தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாமை இன்று அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பலர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் வருகிற 30.1.19 ஆம்தேதி வரை 48 நாட்கள் நடைபெற உள்ளது. முகாமில் திருக்கோவில் மற்றும் திருமடங்களைச்சேர்ந்த 29 யானைகள் கலந்து கொள்கின்றன. யானைகள் வருகையையொட்டி முகாம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. பொதுமக்கள் திரண்டு முகாமிற்கு வந்த யானைகளை கண்டு மகிழ்ந்தனர்.