December 10, 2018
தண்டோரா குழு
குறும்படங்கள் வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என இயக்குநர் பாரதி ராஜா பேசியுள்ளார்.
ஊட்டி பிலிம் சொசையட்டி சார்பில் 3வது ஊட்டி குறும்படவிழா கடந்த 7ம் தேதி உதகையில் உள்ள அசெம்பிளி திரையரங்கில் துவங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 90 குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதில் சிறந்த படம், நடிப்பு, ஒளிப்பதிவு, திரைக்கதை, இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 குறும்படங்களை மலையாள பட இயக்குநர் ஜாய் மேத்யூ தலைமையிலான குழுவினர் தேர்வு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை பரிசளிப்பு விழா நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குநர் பாரதிராஜா, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், மீரா கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா,
குறும்படம் எடுப்பது என்பது பெரிதல்ல. அதில் என்ன கருத்து சொல்ல வருகிறோம், படைப்புருவாக்கம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். தற்போது புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டது. குறும்படம் என்பது சிறுகதையாக உள்ளது. திரைப்படம், நாவலாக உள்ளது. குறும்படங்கள் வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஊட்டி அற்புதமாக இடம். சென்னையில் திரைப்பட விழா நடத்துவது சுலபம். ஆனால் ஊட்டியில் நடத்துவது என்பது சிரமம். அதனை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள், என்றார்.
தொடர்ந்து 3வது ஊட்டி குறும்பட விழாவின் சிறந்த படமாக இத்தாலியை சேர்ந்த இலியானா இயக்கிய பாடி சிட்டி என்ற குறும்படத்திற்கு தங்க யானை விருது வழங்கப்பட்டது. அருண்குமார் கணேசனின் வுமன் நெட்வொர்க் என்ற குறும்படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தங்கயானை விருது வழங்கப்பட்டது. காவல் தெய்வம் குறும்படத்தில் நடித்த சரண்யா ரவிக்கு சிறந்த நடிப்பிற்கான விருதும், பில்டர் காபியும், ரெட் வைன் படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதும், வுமன் நெட்வொர்க் குறும்ப இயக்குநர் அருண்குமார் கணேசனுக்கு சிறந்த இயக்குநருக்கான தங்க யானை விருதும் வழங்கப்பட்டது. இதில் ஊட்டி பிலிம் சொசைட்டி செயலாளர் பவா செல்லதுரை, எழுத்தாளர் அஜயன்பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக விழாவில் 2 ஆண்டுகள் லண்டனில் இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் அவர் நடித்த கனவு திரைப்படமான ஓம் திரைப்படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.