October 24, 2018
நேயப்பிரியன்
விபத்துக்குள்ளாகி மீட்கப்படும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு முறையாக சிகிச்சையளித்து பராமரிக்க கோவை மாவட்ட வனஅலுவலக வளாகத்தில் ஒரு சிகிச்சை மையம் துவங்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர். நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் சிலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் வனச்சட்டத்தின் படி தடைசெய்யப்பட்ட அட்டவனைக்கு கீழ் வரும் பச்சைக்கிளி, நட்சத்திர ஆமை, மலை அணில், காட்டு முயல், குயில், மணிப்புறா, காட்டு மைனா, மயில், மண்ணுலி பாம்பு, குரங்கு மற்றும் உடும்பு உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகளை செல்லப்பிராணிகளாக கூண்டில் அடைத்து வளர்க்கின்றனர்.
இது குறித்து தகவல் கிடைக்கும் பட்சத்தில் வனத்துறையினர் இயற்கை ஆர்வலர்கள் உதவியுடன் அவற்றை மீட்டு வனஅலுவலக வளாகத்தில் உள்ள கூண்டுகளில் வைத்து உணவு மட்டும் கொடுத்து சில நாட்கள் கழித்து வனப்பகுதிகளில் விட்டுவிடுவது வழக்கம்.அவ்வாறு விடுவிப்பதற்கு முன்பு அவைகளுக்கு ஏதேனும் நோய்தொற்று உள்ளதா? அவை முழுமையாக குணம் அடைந்துவிட்டனவா? என்பதை பரிசோதனை செய்ய வனஅலுவலக வளாகத்தில் ஒரு கால்நடை மருத்துவர்கூட கிடையாது.
இது குறித்து இயற்கை ஆர்வலர் சந்தீப் குமார் ஜெயின் கூறுகையில்,
இரக்க குணம் படைத்த சிலர் காயம்பட்ட பறவைகள் மற்றும் சிறு விலங்குளை பார்க்கும் பட்சத்தில் அவற்றை மீட்டு கோவை மாநகராட்சி வஉசி உயிரியல் பூங்காவிற்கு எடுத்துச்செல்கின்றனர். சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளும் அங்கு இருந்தாலும், பணியில் இருக்கும் கால்நடை மருத்துவரோ, “செண்ட்ரல் சூ அத்தாரட்டி விதிமுறைப்படி நாங்கள் இவற்றை இங்கு வைத்திருக்க முடியாது. வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லுங்கள் எனக் கூறி முதலுதவி கூட கொடுக்காமல் விரட்டி விடுகின்றனர். வன அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றால், “இங்கு கால்நடை மருத்துவர் இல்லை நீங்கள் இதை டவுன்ஹாலில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள் என அலைக்கழிக்கின்றனர். இதற்குள் காயம்பட்ட உயிரினம் இறந்து விடுகின்றன. உயிருடன் இருக்கும் பட்சத்தில் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால் முதலுதவி மட்டும் கொடுத்து “வனஅலுவலகத்தில் ஒப்படைத்து விடுங்கள்” எனக்கூறி மீண்டும் மாவட்ட வன அலுவலகத்திற்கே திருப்பி அனுப்புகின்றனர். இப்படி அளக்கழிக்கப்படுவதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் கூட நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று அந்த வாயில்லா ஜீவன்களை அப்படியே விட்டுச் செல்லும் நிலை ஏற்படும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
இந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக பெய்த தென்மேற்கு பருவமழைக் காரணமாக கோவை நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட குளங்களில் நீர் நிறைந்து காணப்படுகின்றன. இது உள்நாட்டு வலை செல்லும் பறவைகளான பெலிகன் (கூழைக்கடா) பெயிண்டட் ஸ்டார்க், ஐபிஸ், கார்மரன்ட், காமன்கூட்ஸ், பர்பல்மோர் ஹென், லிட்டில் கிரீப், ஸ்டிலிட், சாண்ட் பைபர் போன்ற பறவைகளை இங்கு முகாமிட வைத்துள்ளது. இவ்வாறு வரும் பறவைகளை சிலர் வலைவைத்து பிடித்தும், உண்டிவில் போன்றவற்றை கொண்டு அடித்தும் வேட்டையாடுகின்றனர். சிலர் மீன்களில் வாயில் மயக்க மருந்தை வைத்து பறவைகள் அதிகம் உள்ள இடத்தில் போட்டுவிடுகின்றனர், அவற்றை உண்ணும் பறவைகள் சுவாசிக்க முடியாமல் கரையில் விழுந்து உயிருக்கு போராடுகின்றன. சில நாட்களுக்கு முன் உக்கடம் வாளாங்குளக்கரையில் மூச்சு திணறியபடி நீந்தமுடியாத நிலையில் ஒரு ஸ்பாட்பில்டு பெலிகன் பறவை கரை ஒதுங்கியது. அதை பிரேம் என்ற இளைஞர் மீட்டு “ஓசை” அமைப்பைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் சையதிடம் ஒப்படைத்தார். அந்த பறவைக்கு டவுன்ஹாலில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு வழக்கம் போல் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொடர் சிகிச்சையும் கவனிப்பும் இல்லாததால் அந்த பறவை இறந்துவிட்டது அதை பிரேதபரிசோதனைக் கூட செய்யாமல் அப்புறப்படுத்திவிட்டனர்.
கால்நடை மருத்தவர் அசோகன் போன்றவர்கள் இப்படியான பறவைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். வஉசி பூங்கா இயக்குநராக பணியாற்றிய போது தாடை உடைந்த முதலைக்கு செயற்கை தாடை பொருத்தியது, பாம்பு வயிற்றில் இருந்து புற்றநோய் கட்டியை அகற்றியது, மயிலுக்கு கண் அறுவை சிகிச்சை என சவாலான பல விஷயங்களில் வெற்றி கண்டுள்ளார். இவரைப் போல அனுபவம் மிக்க கால்நடை மருத்துவரை வாரத்தில் மூன்று முறையாவது வன அலுவலகத்திற்கு வந்து செல்லும் சிறப்பு மருத்துவராக தற்சமயத்திற்கு நியமிக்கலாம் என்பதும், சிகிச்சையளிக்க தேவையான அனைத்து வசதிகளை வனஅலுவலக வளாகத்திலேயே செய்யலாம் என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்து.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் கூறுகையில்,
இது போன்ற உயிரினங்கள் வரும் பட்சத்தில் அவைகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு கால்நடை மருத்துவரை நியமிப்பது அல்லது வஉசி பூங்காவில் வைத்து சிகிச்சையளிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.