October 24, 2018
தண்டோரா குழு
கோவை தொண்டாமுத்தூர் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் பால் வியாபாரி பலியானார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியை சார்ந்தவர் சுரேஷ்.இவர் சொந்தமாக பால் வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்றிரவு தொண்டாமுத்தூரில் இருந்து விராலியூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது விராலியூர் அருகே வரும்போது சாலையின் எதிர்புறம் திடீரென வந்த ஒற்றை காட்டு யானை சுரேஷை தாக்கி தூக்கி வீசியது.இதில் படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார்.
அப்போது அந்த பகுதியில் யானை விரட்டும் பணியில் இருந்த வனத்துறையினர் யானையின் சத்தத்தை கேட்டு அங்கு சென்று பார்த்த போது சுரேஷ் மயக்க நிலையில் இருந்துள்ளார்.இதனைத்தொடர்ந்து 108 அவரச ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர்.அங்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் சுரேஷை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.ஆனால் வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் விராலியூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.