June 18, 2026
தண்டோரா குழு
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் இரண்டு பேராசிரியர்கள், கோயம்புத்தூர் குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (SKASC) நடைபெற்று வரும் ‘பாரதிய பாஷா இன்டர்ன்ஷிப் புரோகிராம் 2.0’ (பாரதிய மொழிகளை கற்கும் பயிற்சித் திட்டம்) என்ற 10 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்க வருகை தந்துள்ளனர்.
தமிழ் மொழியின் தொன்மை, கலாச்சாரம், இலக்கியம் மற்றும் பாரம்பரிய வாழ்வியல் முறை ஆகியவற்றை மையமாகக் கொண்டு, வித்யா பாரதி உச்ச சிக்ஷா சன்ஸ்தான் மற்றும் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி இணைந்து இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இப்பயிற்சி முகாமின் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICSSR) முன்னாள் தலைவர் பேராசிரியர் பி. கனகசபாபதி, இந்த பயிற்சி திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்து, பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“மொழி என்பது சமூகங்களுக்கு இடையே ஒரு பாலமாகச் செயல்பட்டு, கருத்துக்கள், மதிப்புகள் மற்றும் பாரம்பரியங்களைப் பரிமாறிக்கொள்ள உதவுகிறது. உலகிலேயே மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ், இந்திய கலாச்சாரத்தின் பெருமையை பிரதிபலிக்கும் சிறந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ளது. சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியங்கள், நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.
ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்வது, ஒருவரின் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன், மாற்றியமைத்துக் கொள்ளும் பண்பு மற்றும் கலாச்சார புரிதலை மேம்படுத்துகிறது.
பன்மொழித் திறன் என்பது மாணவர்கள், பணிபுரிவோர் மற்றும் பொதுமக்கள் தங்களின் தாய்மொழியைத் தாண்டி, பிற இந்திய மொழிகளிலும் புலமை பெற ஊக்குவிக்கிறது.”
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வித்யா பாரதி உச்ச சிக்ஷா சன்ஸ்தானின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் கே.என்.ரகுநந்தன்,இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட மொழித் பாரம்பரியங்களை மாணவர்கள் ஆர்வத்துடன் அறிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இவ்வமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே. சுந்தரமூர்த்தி, இந்த திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும்,நிர்வாக அறங்காவலருமான எஸ். மலர்விழி விழாவிற்குத் தலைமை தாங்கி,மாணவர்கள் ஆர்வத்துடன் தமிழைக் கற்க ஊக்குவித்தார்.உலக அளவில் தமிழ் பாரம்பரியத்திற்கு என்று ஒரு தனித்துவமான இடம் உள்ளது என்றும், இதுபோன்ற திட்டங்கள் மாணவர்களிடையே மொழி ஒற்றுமையையும் கலாச்சார புரிதலையும் வளர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர். ஜெகஜீவன் வரவேற்புரை ஆற்றினார். அப்போது, மாணவர்கள் தமிழை ஒரு மொழியாக மட்டும் பார்க்காமல், அது ஓர் அடையாளம் மற்றும் இந்திய நாகரிகத்தின் சின்னம் என்பதை உணர்ந்து கற்க வேண்டும் என்று கூறினார்.
இவ்விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் கே.சுந்தரராமன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் ஆர்.விஜயசாமுண்டீஸ்வரி நன்றியுரை ஆற்றினார்.