June 19, 2026
தண்டோரா குழு
கோவையில் செயல்பட்டு வரும் சுகுணா PIP பள்ளி மற்றும் FIITJEE நிறுவனத்தின் ஒருங்கிணைந்த NEET/JEE பயிற்சி திட்டத்தில் மாணவர்களை சேர்த்த பெற்றோரிடம் வசூலிக்கப்பட்ட பாதுகாப்பு வைப்பு தொகையை திருப்பி வழங்காததாக எழுந்த புகாரின் பேரில், பள்ளி தலைவர் மற்றும் FIITJEE நிறுவனருக்கு எதிராக பீளமேடு காவல்துறையினர் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை வட்டமலைபாளையத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர் அளித்த புகாரில், தனது மகனை 2023-ஆம் ஆண்டு சுகுணா PIP பள்ளியில் சேர்த்தபோது, FIITJEE நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட NEET/JEE பயிற்சி திட்டத்திற்காக ரூ.1 லட்சம் பாதுகாப்பு வைப்பு (Refundable Caution Deposit) தொகை செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
பயிற்சி மற்றும் பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் 60 நாட்களுக்குள் அந்த தொகை முழுமையாக திருப்பி வழங்கப்படும் என பள்ளி நிர்வாகமும் FIITJEE நிறுவனமும் உறுதியளித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 2025 பிப்ரவரி மாதம் படிப்பு முடிவடைந்த பின்னரும் பலமுறை கோரிக்கை விடுத்தும் பணம் திருப்பி வழங்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்,இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தை அணுகியபோது FIITJEE நிறுவனத்தை தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டதாகவும், FIITJEE நிர்வாகத்தை அணுகியபோதும் எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பல பெற்றோர்களும் இணைந்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில், பீளமேடு காவல் நிலையத்தில் CSR பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.விசாரணையின் அடிப்படையில்,சுகுணா PIP பள்ளி தலைவர் வி. லட்சுமிநாராயணசாமி மற்றும் FIITJEE நிறுவனத்தின் நிறுவனர் தினேஷ் குமார் கோயல் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 (மோசடி) கீழ் குற்ற எண் 215/2026 ஆக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி வளாகத்தில் CBSE விதிமுறைகளுக்கு முரணாக தனியார் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் விசாரணையை பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் வசூலிக்கும் பாதுகாப்பு வைப்பு தொகைகள் தொடர்பாக இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.