August 3, 2026
தண்டோரா குழு
போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருளற்ற சமூகத்தை ஊக்குவிக்கவும் கோயம்புத்தூர் நல்லாம்பாளையத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா “போதைப்பொருள் இல்லாத பாரதம்” (லஹரிமுக்த பாரதம்) மாணவர் பேரணியை நடத்தியது.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தீவிர பங்கேற்புடன் இந்த பேரணி நடைபெற்றது.
“எங்கள் குரல். எங்கள் எதிர்காலம். எங்கள் நாடு” என்ற முழக்கத்துடன் அமைக்கப்பட்ட இந்தப் பேரணியை, கவுண்டம்பாளையம் உதவி காவல் ஆணையர் சரவணன் முன்னிலையில்,கவுண்டம்பாளையம் காவல் ஆய்வாளர் கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மாணவர்களிடையே உரையாற்றிய அவர்கள், ஒழுக்கம், நன்நெறி மதிப்புகள் மற்றும் பொறுப்பான முடிவுகளை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து நினைவூட்டினர். போதைப்பொருட்களிலிருந்து விலகி நின்று, பொறுப்புள்ள குடிமக்களாக வளருமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
போதைப்பொருளுக்கு எதிரான செய்திகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், “போதைப்பொருளுக்கு விடை கொடுப்போம், வாழ்க்கையை ஏற்போம்” போன்ற வலுவான முழக்கங்களை எழுப்பியும் மாணவர்கள் வீதிகளில் அணிவகுத்துச் சென்றனர். போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தப் பேரணி உதவியது.
மதிப்புக் கல்வி மூலம் போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்குவதற்கான பள்ளியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், ஒழுக்கமும் மதிப்பும் மிக்க வாழ்க்கையை வாழ்வோம் என்ற மாணவர்களின் உறுதியேற்புடன் இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.