October 22, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை பாலத்திற்கு அருகில் கருப்பராயன் குட்டை எனும் பகுதி உள்ளது.கருப்பராயன் குட்டை பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் மேல் வாழ்ந்து வருகின்றனர்.இந்த பகுதிக்கு செல்லும் வழியில் தரைப்பாலம் உள்ளது.கடந்த மாதம் பெய்த மழையினால் தரைப்பாலத்திற்கு அடியில் குப்பைகளும்,சகதியும் தேங்கியதால்,சாக்கடை கழிவு நீர் தரைப்பாலத்திற்கு மேல் செல்கிறது.இதனால் இப்பகுதியைத் தாண்டி செல்லும் பொதுமக்கள்,முதியோர்,மாணவ மாணவிகள் பெரும் சிரமப்பட்டனர்.
கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை அப்பகுதியில்,ஏற்கனவே பல்வேறு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது.இது மேட்டுப்பாளையம் நகரம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளதால் போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த வேண்டி அப்பகுதி பொதுமக்கள்,மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.பெரிதும் சுகாதார சீர்கேடு பாதிப்பிற்கு உள்ளாகும் இப்பகுதியில் இந்த கால்வாயை தூர்வார நமது மேட்டுப்பாளையம் குழுவினர்,மேட்டுப்பாளையம் நகராட்சி,அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் ஒருங்கிணைந்து களத்தில் இறங்கினர்.
இதையடுத்து,கடந்த ஞாயிறன்று காலை 8 மணியளவில் கருப்பராயன் குட்டை பகுதியில் தரைப்பாலம் சுத்தம் செய்ய மற்றும் பாலத்தின் இருபுறமும் சகதிகளை தனியார் JCB மூலம் தூர்வாரப்பட்டது.இந்த பகுதிக்கு செல்லும் வழியில் இருந்த புதர்களும் அழிக்கப்பட்டன.இதன் காரணமாக 50 லோடு சகதிகள்,பிளாஸ்டிக் கழிவுகள்,மது பாட்டில்கள் ஆகியன அகற்றப்பட்டன.அதைபோல் மயானம் சீரமைப்பு மற்றும் பயணிகள் நிழற்குடை சீரமைப்பு,தரைப்பாலம் பகுதியில் மின் விளக்குகள் பழுது நீக்கி சீரமைக்கப்பட்டது.
இந்த தூய்மை பணியை மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் துவக்கி வைத்தார்.மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ஜெயராமன், சுகாதார ஆய்வாளர் செந்தில் ஆகியோரும் உடன் இருந்தனர்.மேட்டுப்பாளையம் நகராட்சி துப்புறவு பணியாளர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.மேலும், மேட்டுப்பாளையம் காவல் சார்பு ஆய்வாளர் P.திலக் மேட்டுப்பாளையம் சத்ய சாய் சேவா சங்கம்,மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை நமது மேட்டுப்பாளையம் குழுவின் நிர்வாகிகள் பாஷா,ஜெய்குமார்,மஸ்தான்,சுதர்சன்,ஸ்டீபன்,சுரேஷ்,சக்திவேல்,கணேஷ்,மணிகண்டன்,சந்திரசேகர், தமிழகம்சேட் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.இது நிரந்தர தீர்வல்ல,மேல்மட்ட பாலம் மற்றும் தார்சாலைகளை சீரமைத்து தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.