August 25, 2018
தண்டோரா குழு
என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு ஒரு தேர்தலில் கூட திமுக வெற்றி பெற்றது கிடையாது என முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து அவரது நினைவிடம் நோக்கி செப் 5–ந் தேதி அமைதிப் பேரணி நடத்தப்போவதாக மு.க.அழகிரி அறிவித்து இருந்தார்.
இதையடுத்து, மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது இல்லம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து 2வது நாளாக முக அழகரி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், மதுரை, ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி,
செப்.5 பேரணிக்கு பிறகு மக்கள் என்னை எப்படி ஏற்றுகொள்கிறார்கள் என்று எனக்கு தெரியும். பேரணியில் ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்பர். பேரணிக்கு பிறகு திமுகவில் பெரிய ஆபத்து ஒன்று ஏற்படும். கருணாநிதி இருந்த போதே கட்சி பதவிக்கு ஆசைப்படாத நான் இப்போதா ஆசைப்பட போகிறேன். என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு தி.மு.க ஒரு முறை கூட தேர்தலில் வெற்றி பெறவில்லை. என்னை பற்றிய சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு ஏற்கெனவே எனது மகன் துரை தயாநிதி பதிலளித்து விட்டார். தாய் கட்சியான திமுகவில் நான் சேர்வதில் எந்த தவறும் கிடையாது. திமுகவில் மீண்டும் இணைத்து கொண்டால் சேர்வேன். அவசர அவசரமாக திமுக தலைவர் பதவியை ஏற்க ஸ்டாலின் செல்கிறார் எனக் கூறினார்.