March 23, 2018
தண்டோரா குழு
கேரளாவில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்ய முயன்ற இளம்பெண்ணைத் திருமணத்துக்கு சிலமணிநேரத்துக்கு முன் அவரின் தந்தையே குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், அரீகோட் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா (வயது 22). இவர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் டயாலிசிஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார்.இவரின் தந்தை ராஜன் ஒரு டிரக் ஓட்டுநர். இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், ஆதிராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுக் காதலாக மாறியது. அந்த இளைஞர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டனர்.
ஆனால், ஆதிராவின் தந்தை ராஜன் இந்தத் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் குடும்பத்துக்குள் தந்தைக்கும், மகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், ஆதிராவும், அந்த இளைஞரும் திருமணம் செய்ய முடிவு செய்த போது ஆதிராவின் தந்தை தானே திருமணம் செய்து வைப்பதாகப் பொய்யான வாக்குறுதி அளித்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து, இருவருக்கும் இன்று வெள்ளிக்கிழமை திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையில் மது போதையில் நேற்று இரவு திருமண மண்டபத்துக்கு வந்த ராஜன் தனது மகள் ஆதிராவுடன் திருமணத்தை நிறுத்தக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனால், இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்ததையடுத்து, தான் வைத்திருந்த கத்தியால் மகள் என்றும் பாராமல் ஆதிராவைக் குத்திக் கொலை செய்தார்.
இதில், ரத்த வெள்ளத்தில் இருந்த அதிராவை உறவினர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஆதிரா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து ராஜனைக் கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.