February 17, 2018
தண்டோரா குழு
சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது என்ற பிரதமரின் கருத்தை வரவேற்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் டால்கோட்ரா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதத்தை விட அழகான பழமையான தமிழ் மொழி தனக்கு தெரியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறினார்.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின்
தமிழ்மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதேபோல், தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை “தேசிய நூலாக” அறிவிக்க வேண்டுமெனவும் மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.