February 15, 2018
தண்டோரா குழு
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அதில் 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.எனினும்192 டிஎம்சி நீர் போதாது என்றும் கூடுதலாக 50 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதைபோல், தமிழகத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்ட நீரில் 192 டிஎம்சி நீரில் 132 டிஎம்சியாக குறைத்து விட்டு மீதமுள்ள 60 டிஎம்சி தண்ணீரை தங்கள் மாநிலத்துக்கே தர வேண்டும் என்று கர்நாடகமும் மேல்முறையீடு செய்தது.தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த காவிரி நீர் தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்வராய், ஏ.எம்.கன்வில்கர்ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.