January 17, 2018
தண்டோரா
பிப்.,21ம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்கவிருக்கும் கமல் தனது கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தான் அரசியல் கட்சி துவங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்து விசில் என்ற செயலியையும் துவங்கியிருந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன் அறிக்கையில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,
என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்திற்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். நன்றியை தாண்டி கடமைகள் நிறைய இருக்கிறது. அக்கடமைகளின் துவக்கமாக மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து வருகிற பிப்ரவரி 21ம் தேதி துவக்க இருக்கிறேன். மக்களுடனான இந்த சந்திப்பு புரட்சிக்காகவோ, கவர்ந்திழுக்கவோ அல்ல; எனது புரிதல் மற்றும் எனது கல்விக்காக மட்டுமே.குடியரசில் குடிமக்களை உயர்த்த வேண்டும். அதை நோக்கி என் பயணம் இருக்கும். நாம் சேர்ந்து தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும்.அதுவே ஜனநாயகம்.கரம் கோரத்திடுங்கள்; களத்தில் சந்திப்போம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கமல் முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார்.
ஏற்கனவே ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்டுள்ள நிலையில், தற்போது கமலும் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.