December 15, 2017
தண்டோரா குழு
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே நாடாளுமன்ற குளிர்காலகூட்டத்தொடர் தொடங்கியது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் இன்று தொடங்கி, ஜனவரி 5ம் தேதி வரை மொத்தம் 14 நாட்கள் நடைபெற உள்ளது. புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களை அறிமுகப்படுத்தி மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனையடுத்து மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின், டிசம்பர் 18ம் தேதி வரை மக்களவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார் . இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் உட்பட 14 புதிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
அதைப்போல் மாநிலங்களவை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவில் புயலால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஓகி புயல் தாக்கியதில் 60 பேர் இறந்தனர் மற்றும் 33000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
புயலால் உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.