குடிநீர் தட்டுப்பாட்டை சீர் செய்யும் வகையில் நகர்ப்பகுதியில் அனுமதியின்றி பைப்லைன் மூலம் குடிநீர் எடுப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய்த்துறை முதன்மை செயலாளர் மற்றும் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வறட்சி நிவாரண பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வு கூட்டம் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் மற்றும் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தலைமையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தீரஜ்குமார் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் முன்னிலையில் இன்று (ஏப்ரல் 06) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிர்வாக ஆணையர் பேசியதாவது ;
கோவை மாநகராட்சி பகுதிக்கு சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் வழங்கப்பட்ட வந்த நிலையில் தற்பொழுது வறட்சியின் காரணமாக பில்லூர் அணையிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் மழைக்காலத்தில் சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாநகராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகிக்கும் வகையில் ஆள்துளை கிணறு அமைத்திடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை சீர் செய்யும் வகையில் நகர்ப்பகுதியில் அனுமதியின்றி பைப்லைன் மூலம் குடிநீர் எடுப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிளிலும் ஆய்வு மேற்கொண்டு அனுமதியின்றி பைப்லைன் பயன்படுத்தவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் குடிநீர் வடிகால் வாரியத்துறையுடன் நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் இணைந்து செயல்பட்டு தினந்தோறும் குடிநீர் வழங்கிட பணிகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் விநியோகத்தில் சிறப்பு கவனம் எடுத்து தினந்தோறும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தற்பொழுது வறட்சி கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு வருங்காலங்களில் ஏரி மற்றும் கண்மாய்களில் போதிய அளவு தண்ணீர் தேங்கும் அளவிற்கு ஏதுவாக குடிமராமத்து பணிகள் மூலம் கால்வாய்கள் மற்றும் சட்டர், ஏரி மற்றும் குளங்களில் உள்ள கரைப்பகுதிகளை பலப்படுத்துல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாகவும், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் நோக்கம் வரும் காலகட்டங்களில் தேவையான குடிநீர் விநியோகம் செய்திட பயனுள்ளதாக இருக்கும் என்பதே ஆகும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் கால்நடை பராப்பரிப்புத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து தற்பொழுது உள்ள சூழ்நிலைக்கேற்ப கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை உற்பத்தி செய்வதிலும் கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்திரிகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, பயிற்சி ஆட்சியர் பிரியங்கா, வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, சின்னசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு