March 19, 2017
தண்டோரா குழு
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் பல மொழிகளில் தன் குரல்வளத்தால் அனைவரையும் கவர்ந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
தன் திரைபயணத்தில் எச்பிபி 50 வருடத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இவர் தற்போது எஸ்பிபி 50 என்ற பெயரில் உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரிக்காக தற்போது அமெரிக்காவில் இருக்கும் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், தனக்கும், சித்ராவுக்கும் மற்றும் கச்சேரி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இளைஞானி இளையராஜாவின் வழக்கறிஞர் நோட்டிஸ் ஒன்றை அனுப்பியுள்ளாராம். அதில் இளையராஜா இசையமைத்த பாடலை மேடைகளில் பாடக்கூடாது என்றும் மீறினால் மிகப்பெரிய தொகையை அபராதமாக கட்டவேண்டும் என்றும் கூறியுள்ளாராம்.
கடந்தவருடம் கனடாவில் தொடங்கி மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் நடத்திய போது எதுவும் சொல்லாத இளையராஜா அமெரிக்காவில் ஏன் இப்படி செய்கிறார் என தெரியவில்லை.
இதனால் இனி அவரின் இசையில் வந்த பாடலை பாடமாட்டேன். அதைத்தவிர மற்ற எனது பாடல்களை பாடவிருக்கிறேன். இதற்கு ரசிகர்கள் ஒத்துழைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.