March 18, 2017
தண்டோரா குழு
பந்தய கார் வீரர் அஸ்வின் சுந்தர் சென்ற கார் மரத்தின் மீது மோதி தீப்பிடித்ததில், அவரும் அவரது மனைவியும் அங்கேயே உயிரிழந்தனர்.
சென்னையைச் சேர்ந்த கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர். அவர் தனது மனைவி நிவேதாவுடன் சனிக்கிழமை அதிகாலையில் பட்டினம்பாக்கம் அருகே சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். கார் அதிவேகமாக சென்றதாகக் கூறப்படுகிறது.
கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் மரத்தின் மீது மோதியது. இதனால் கார் திடீரன்று தீப்பிடித்து எரிந்தது. கார் எரிவதைப் பார்த்த சிலர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். அதன் பின் காரிலிருந்து இருவரையும் மீட்டபோது, அவர்கள் தீயில் கருகி இறந்துவிட்டனர் என்பது தெரிந்தது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அஸ்வின் சுந்தர் சமீபத்தில் நடைபெற்ற தேசிய கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்றவர். அவரது மனைவி சென்னை தனியார் மருத்துவமனையில் மருத்துவர்.
இதனிடையே சாலைத் தடுப்பினால் நிலை தடுமாறிய கார் மரத்தின் மீது மோதியதால் இந்த தீ விபத்து நேர்ந்திருக்கக் கூடும் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், போலீசார் புலன்விசாரணை நடத்தி வருகின்றனர்.