September 7, 2026
தண்டோரா குழு
கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ‘மண்டாடி’ படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி, “மண்டாடி படம் வெளியான பிறகு, தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தைப் போல, மீனவர்களின் வீர விளையாட்டான படகு பந்தயத்திற்கும் அரசு உரிய அங்கீகாரம் வழங்கும் என நம்புகிறேன்” என்றார்.
மேலும், தனது திரைப்படம் முதல் முறையாக IMAX திரையில் வெளியாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த சூரி, மண்டாடி திரைப்படம் தான் நடித்த விடுதலை திரைப்படத்தைப் போலவே மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
படத்தில் இடம்பெறும் புகைப்பிடிக்கும் காட்சிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், படப்பிடிப்பின்போதே அது தொடர்பாக கேள்வி எழுப்பியதாகவும், கதைக்கு தேவையானதாக இருந்ததால் அந்தக் காட்சிகள் இடம்பெற்றதாகவும் கூறினார்.
அதே நேரத்தில், அதற்குள் ஒரு சமூக செய்தியும் இடம்பெற்றுள்ளதாக விளக்கமளித்தார்.“நம் மண் சார்ந்த கதையில் நடித்திருப்பது எனக்கு பெருமையாக உள்ளது” என தெரிவித்த நடிகர் சூரி, தொடர்ந்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுடன் இணைந்து நடனமாடினார்.
இளம் தலைமுறையினர் வீர விளையாட்டுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நடிகர் சூரி அறிவுறுத்தினார்.