September 6, 2026
தண்டோரா குழு
பழங்குடியின மக்களின் நலத்திட்டங்களை மேம்படுத்த மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்.
கோவை வேலந்தாவளம் பகுதியில் நடைபெற்ற சாய் நேச்சுரோபதி மற்றும் யோகா கல்லூரி நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன்,
மக்கள் தேவைகளுக்காக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திப்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்றார். அதன்படி, இன்று மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சரை சந்தித்துள்ளதாகவும், பழங்குடியின மக்களின் நலன்கள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்காக மத்திய அரசின் துணை,உதவி மற்றும் நிதி அவசியம் எனக் கூறிய அவர், விளிம்புநிலை மக்களுக்கான அரசு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதை நிறுத்தினால்,பல்வேறு வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் என்றார்.
தமிழ்நாட்டில் பழங்குடியின மக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் அவர்களின் பிரச்சினைகள் போதிய அளவில் கவனிக்கப்படுவதில்லை என்றும், குறிப்பாக சாதிச் சான்றிதழ் பெறுவதில் கூட அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் திருமாவளவன் கூறினார். இந்தப் பிரச்சினையை மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆடம்பர விழாக்களில் உணவு வீணடிக்கப்படுவது குறித்தும் திருமாவளவன் பேசினார். ஒருவர் சாப்பிடக்கூடிய அளவைவிட பல மடங்கு உணவு இலைகளில் பரிமாறப்பட்டு, சாப்பிட முடியாமல் வீணாகும் நிலை உள்ளது. அந்த அளவு உணவு பல ஏழைகளுக்கு உணவாக அமையக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
கட்சி, கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் மனிதநேயமே உயர்ந்தது. அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வுடன் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
முன்னதாக பேசிய அமைச்சர் வன்னியரசு,
மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நிகழ்ச்சிக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்துக்கான நிதியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே தாம் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பழங்குடியின மற்றும் ஆதிதிராவிட மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பழங்குடியின மக்களின் மரபு, நடைமுறை மற்றும் மொழியைப் பாதுகாத்து, அதனை மீட்டு எழுத்துருவாக்கும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
செங்காந்தள் மலரை சாகுபடி செய்து, அதனை நேச்சுரோபதி மருத்துவத் துறைக்கு பயன்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
நேச்சுரோபதி மருத்துவம் மற்றும் யோகாவை சிலர் மதம் சார்ந்ததாக மாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய வன்னியரசு, மருத்துவம் மருத்துவமாகவும், யோகா யோகாவாகவும் இருக்க வேண்டும்; அதற்குள் மதம் சார்ந்த செயல்பாடுகள் இடம்பெறக் கூடாது என்றார்.
சமூக நீதித்துறையின் செயல்பாடுகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி வரும் நிலையில், மத்திய அரசும் சமூகநீதித் திட்டங்களுக்கு உரிய நிதியை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,
நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சரிடம் மலைவாழ் மக்களின் நலத்திட்டங்களை மேம்படுத்துதல், வீடு கட்டுதல், சாதிச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
யோகா நிறுவனங்கள் சில,யோகா கற்றுத்தருவதாகக் கூறி மதம் சார்ந்த கருத்துகளைப் பரப்புவதாக அமைச்சர் வன்னியரசு கூறியது குறித்து கேட்கப்பட்டபோது, மருத்துவம் மருத்துவமாகவும், யோகா யோகாவாகவும் இருக்க வேண்டும் என்பதையே அவர் சுட்டிக்காட்டியதாக திருமாவளவன் விளக்கமளித்தார்.
மதச்சார்பற்ற கொள்கையை கடைப்பிடிக்கும் நிலையில், எந்தவொரு அமைப்போ அல்லது அரசோ மதம் சார்ந்த கருத்துகளை பிரசாரம் செய்யக்கூடாது. அது மக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பட்டியல் இன மக்களுக்கான முதலமைச்சர் பதவி எப்போது வரும் என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், அவர்கள் இன்னும் ஒரு வலிமையான அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு வலிமை பெறும்போது அந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.
முதலமைச்சருடனான கூட்டத்தில் துணை முதலமைச்சர் தொடர்பான நகர்வுகள் அல்லது பேச்சுவார்த்தை இருக்குமா என செய்தியாளர்கள் கேட்டபோது, “அதை நீங்கள் வந்து கலந்து கொண்டு பரிசீலியுங்கள்” என நகைச்சுவையாக பதிலளித்தார்.