• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குமரகுரு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஸ்வாகதம் நிகழ்ச்சி

August 31, 2026 தண்டோரா குழு

பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களாக மட்டும் இல்லாமல், சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்களாகவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களாகவும், தொழில்முனைவோராகவும் உருவாக வேண்டும் என்று குமரகுரு நிறுவனங்களின் தலைவர் சங்கர் வனவராயர் வலியுறுத்தினார்.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘ஸ்வாகதம் 2026’ நிகழ்ச்சியில்,2026-ம் ஆண்டு முதலாம் ஆண்டு பி.இ.,பி.டெக்.மாணவர்களுக்கான முறையான வரவேற்பு மற்றும் அறிமுக

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

“என்னை யார் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்?” என்று மாணவர்கள் கேட்பதற்குப் பதிலாக, “நான் எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போகிறேன்? உலகத்துக்காக என்ன உருவாக்கப் போகிறேன்?” என்று சிந்திக்கத் தொடங்க வேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் மதிப்பெண்கள் மட்டுமே வெற்றியின் அளவுகோல்கள் அல்ல. கற்ற அறிவை நடைமுறையில் பயன்படுத்தி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனும், புதியவற்றை உருவாக்கும் திறனுமே எதிர்காலத்தில் முக்கியமானதாக இருக்கும் என்றார்.

பொறியியல் கல்வி என்பது பாடங்களைப் படித்து மதிப்பெண் பெறுவதுடன் முடிந்து விடக்கூடாது. வகுப்பறைகள், ஆய்வகங்கள், தொழில் நிறுவனங்களுடனான தொடர்புகள், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையங்கள் ஆகிய அனைத்தையும் மாணவர்கள் தங்களது கற்றலின் ஒரு பகுதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவைப் பெறுவதைக் காட்டிலும், அந்த அறிவைத் திறனாக மாற்றிக் கொள்வது முக்கியம் என்றார்.

வேகமாக மாறி வரும் உலகில் மாணவர்கள் தங்களைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், ‘ALIVE’ என்ற அணுகுமுறையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மாற்றத்துக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளுதல், தொடர்ந்து கற்றல், பல்வேறு அனுபவங்களை ஒருங்கிணைத்தல், புதிய துறைகளில் முயற்சி செய்தல், உலகத்துடனும் சமூகத்துடனும் தொடர்புடன் இருத்தல் ஆகியவை மாணவர்களின் வளர்ச்சிக்கு அவசியம் என்றார்.

‘ஸ்வாகதம்’ என்பது ஒரு சம்பிரதாயமான வரவேற்பு நிகழ்ச்சி மட்டுமல்ல; மாணவர்களின் நான்கு ஆண்டு பயணத்துக்கான தொடக்கமாகும் என்று குறிப்பிட்ட சங்கர் வனவராயர், குமரகுருவில் மாணவர்கள் தங்களது ஆர்வங்களையும் திறமைகளையும் கண்டறிந்து, பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களுக்கான தனித்த அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்றார். குமரகுரு என்பது ஒரு கல்லூரி அல்லது ஒரு குறிப்பிட்ட கல்வித் துறையை மட்டும் உள்ளடக்கியது அல்ல. கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம், தொழில்நுட்பம், தொழில்முனைவு, விளையாட்டு, கலை, பண்பாடு மற்றும் சமூகப் பங்களிப்பு என பல்வேறு தளங்களை உள்ளடக்கிய விரிவான கற்றல் சூழல் என்று அவர் குறிப்பிட்டார். மாணவர்கள் தங்கள் துறைக்கு அப்பால் உள்ள வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

குமரகுருவின் பாரம்பரியம் என்பது கடந்த காலத்தின் வரலாறு மட்டுமல்ல; எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் என்றும் அவர் கூறினார். அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களின் தொலைநோக்குப் பார்வை, வள்ளலாரின் இரக்கம் மற்றும் மகாத்மா காந்தியின் அறங்காவலர் கொள்கை ஆகியவை குமரகுருவின் அடிப்படைச் சிந்தனைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மாணவர்கள் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியுடன் தனிப்பட்ட நலனிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

உடல் மற்றும் மனநலம், நல்ல பழக்கங்கள், விளையாட்டு, நண்பர்களுடனான உறவு, மூத்த மாணவர்களுடனான தொடர்பு உள்ளிட்டவையும் கல்லூரி வாழ்க்கையின் முக்கிய அங்கங்கள் என்றார்.மாணவர்களின் தனித்துவம், விருப்பங்கள் மற்றும் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் மாணவர் மைய அணுகுமுறையை குமரகுரு பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அதே நேரத்தில் கல்லூரியில் பணியாற்றும் ஒவ்வொருவரையும் மாணவர்கள் மதிக்க வேண்டும் என்றார். பாதுகாப்புப் பணியாளர்கள் முதல் பேராசிரியர்கள் வரை அனைவரும் குமரகுரு சமூகத்தின் முக்கிய அங்கங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பட்டம் பெறுவதற்காக மட்டும் குமரகுருவுக்கு வராதீர்கள்” என்று மாணவர்களிடம் கூறிய அவர், ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு, புதியவற்றை முயற்சித்து, பொறுப்புடன் செயல்பட்டு, நான்கு ஆண்டுகளை முழுமையாகப் பயன்படுத்தி திறமையான வல்லுநர்களாகவும், புத்தாக்க சிந்தனையாளர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மு. எழிலரசி, புதிய மாணவர்களையும் பெற்றோர்களையும் வரவேற்றார். நிகழாண்டில் 14 பி.இ., பி.டெக். படிப்புகளில் 1,470 மாணவர்கள் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இவர்கள் 52 மாவட்டங்களில் உள்ள 1,150 பள்ளிகளில் இருந்து வந்துள்ளனர். தமிழ்நாட்டுடன் மேலும் 5 இந்திய மாநிலங்களில் இருந்தும், கத்தார், கென்யா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
புதிய மாணவர் சேர்க்கையில் 611 மாணவிகளும், 859 மாணவர்களும் உள்ளனர். மேலும், 535 பேர் தங்கள் குடும்பத்தில் முதல் தலைமுறையாக கல்லூரிக் கல்வி பயிலும் மாணவர்கள். வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வது அவர்களின் கல்விப் பயணத்தை மேலும் வளப்படுத்தும் என்று டாக்டர் எழிலரசி கூறினார்.

வகுப்பறைக் கல்வியுடன் மட்டுப்படாமல், செயல்வழிக் கற்றல், திட்ட அடிப்படையிலான கற்றல், ஆராய்ச்சி, ஆய்வகப் பயிற்சி, மாணவர் குழுக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடனான செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் தங்களது நான்கு ஆண்டு பயணத்தில் உருவாக்குதல், பரிசோதித்தல், செயல்படுத்துதல் மற்றும் பங்களித்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஸ்வாகதம் 2026 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பள்ளியிலிருந்து கல்லூரி வாழ்க்கைக்கு மாணவர்கள் எளிதாக மாறுவதற்கு ‘Ignite 2026’ என்ற 10 நாள் மாணவர் அறிமுக மற்றும் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூத்த மாணவர்களால் வழிநடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம் புதிய மாணவர்கள் குமரகுரு கல்விச் சூழலைப் புரிந்துகொள்வது, தங்களது திறமைகள் மற்றும் ஆர்வங்களை அடையாளம் காண்பது, புதிய நண்பர்களை உருவாக்குவது, சிந்தனை மற்றும் தலைமைத்துவத் திறன்களை வளர்த்துக் கொள்வது ஆகியவற்றுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வளர்ச்சி, ஆழமான கற்றல் மற்றும் தொடர்ச்சியான முயற்சி ஆகிய மூன்று அடிப்படைக் கொள்கைகளில் ‘Ignite 2026’ வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘Belong, Explore, Engage, Become’ என்ற நான்கு நிலைகளின் அடிப்படையில், தனிமனித வளர்ச்சி, குமரகுரு பாரம்பரியம் மற்றும் கல்விச் சூழல், தொழில்முறை திறன், தலைமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு, பொறியியல் சிந்தனை, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து முக்கியக் கற்றல் தொகுதிகள் இடம்பெறுகின்றன.

ஒவ்வொரு மாணவரும் சுமார் 35 பேர் கொண்ட குழுவில் இணைக்கப்பட்டு, மூத்த மாணவர் தலைவர்கள் மற்றும் இணைத் தலைவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படுவர். 10 நாள்களில் 50-க்கும் மேற்பட்ட கற்றல் நடவடிக்கைகள் மற்றும் 60 மணி நேரத்துக்கும் மேலான செயல்பாடுகள் மூலம் புதிய மாணவர்கள் குமரகுரு சமூகத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்வாகதம் 2026 மூலம் குமரகுருவில் தங்களது பயணத்தைத் தொடங்கும் 2030-ம் ஆண்டு மாணவர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பைத் தாண்டி திறன், புத்தாக்கம், தலைமைத்துவம், நல்லொழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளும் வகையில் தங்களது நான்கு ஆண்டு கல்லூரிப் பயணத்தை அமைத்துக் கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க