August 12, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி உள்நாட்டு இ-காமர்ஸ் நிறுவனமான “Flipkart” தமிழ்நாட்டுடன் தனது டிஜிட்டல் வர்த்தக கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதாக அறிவித்துள்ளது. மாநிலத்தின் உற்பத்தி மையங்கள், எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மற்றும் கைவினைஞர்களை இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுடன் இணைக்கும் பணியில் பிளிப்கார்ட் முக்கிய பங்காற்றி வருகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 70 ஆயிரம் விற்பனையாளர்கள் பிளிப்கார்ட் தளத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். திருப்பூரின் பின்னலாடைத் தொழில், ஈரோடு மற்றும் சேலத்தின் ஜவுளி உற்பத்தி, காஞ்சிபுரத்தின் பட்டுத் தொழில், தஞ்சாவூரின் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் டிஜிட்டல் வர்த்தகத்தின் மூலம் புதிய சந்தைகளை எட்டியுள்ளன.
பிளிப்கார்ட்டின் விற்பனையாளர் மேம்பாட்டு மையங்கள் திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் சென்னையில் செயல்பட்டு, வணிகங்களுக்கு தளத்தில் இணைதல், பொருட்கள் பட்டியலிடல், தளவாட சேவைகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குகின்றன.
இந்த டிஜிட்டல் வர்த்தக சூழல் தமிழ்நாடு முழுவதும் 1.3 லட்சத்திற்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவளித்து வருகிறது. மேலும், பிளிப்கார்ட்டின் விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பு 25 லட்சம் சதுர அடிக்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது.
சென்னையில் அமைந்துள்ள பிளிப்கார்ட்டின் தரவு மையம், இந்தியாவில் இந்நிறுவனத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப முதலீடுகளில் ஒன்றாகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மையம், நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கிறது.
மேலும், “Flipkart Minutes” சேவை தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வருகிறது. மாநிலம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட சிறிய விநியோக மையங்கள் செயல்பட்டு வருவதுடன், 1,000-க்கும் அதிகமான மின்சார இருசக்கர வாகனங்கள் டெலிவரி பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
பிளிப்கார்ட்டின் “சமர்த்” மற்றும் “சமர்த் க்ரிஷி” திட்டங்கள் மூலம் எம்எஸ்எம்இ-க்கள், கைவினைஞர்கள், பெண் தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FPO) தேசிய சந்தை அணுகல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக “TN-RISE” அமைப்புடன் இணைந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து பிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,
“தமிழ்நாடு எங்கள் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றுகிறது. மாநிலத்தின் உற்பத்தித் திறன், தொழில்நுட்ப திறமை மற்றும் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி ஆகியவை, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. தமிழக அரசுடன் இணைந்து மாநிலத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பங்களிக்க உறுதியாக உள்ளோம்” என்றார்.