July 23, 2026
தண்டோரா குழு
கோவை சின்னதாடகம் மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் (IMA) கோவை கிளை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம், சின்னதாடகம் வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வி. சம்பத்குமார் முதன்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.விழாவில் இந்திய மருத்துவ சங்கம் (தமிழ்நாடு) 2024–2025 கவுரவ செயலாளர் டாக்டர் எஸ். கார்த்திக் பிரபு, சின்னதாடகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஏ.சுமதி,ரோட்டரி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கோவை IMA தலைவர் டாக்டர் கோஷல் ராம், கவுரவ செயலாளர் டாக்டர் டி. பரமேஸ்வரன்,நிதிச் செயலாளர் டாக்டர் பாலமுருகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நடைபெற்ற இந்த முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை,நரம்பியல் பரிசோதனை, கண் மற்றும் பல் பரிசோதனைகள், கொழுப்பு சத்து பரிசோதனை,கால் பாதம் பாதுகாப்பு குறித்த ஆலோசனை,உடற்பயிற்சி வழிகாட்டுதல், உணவியல் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும் பல்துறை நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் பொதுமக்களுக்கு தனிப்பட்ட மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர்.
இந்த இலவச மருத்துவ முகாமில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர்.