June 16, 2026
தண்டோரா குழு
இந்தியன் வங்கியின் கோவை கள பொது மேலாளர் அலுவலகம் சார்பில் சில்லரை, விவசாயம் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) பயன்பெறும் வகையில் மெகா கடன் முகாம் கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள தாஜ் விவாந்தா ஹோட்டலில் நடைபெற்றது.
இம்முகாமில் மொத்தம் ரூ.1,300 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு இந்தியன் வங்கியின் சில்லரை வணிகம் மற்றும் MSME பிரிவின் முதன்மை பொது மேலாளர் சுஜய் மாலிக் தலைமை தாங்கினார். கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் நேரில் பங்கேற்றதுடன், சேலம், தர்மபுரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த தொழில் முனைவோர், விவசாயிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுஜய் மாலிக், விவசாயம், MSME, வணிகம் மற்றும் சில்லரை வங்கி சேவைகள் தொடர்பான பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.1,300 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் MSME துறையின் பங்களிப்பு முக்கியமானது என்பதால், தொழில் முனைவோருக்கு எளிய நடைமுறைகளின் மூலம் விரைவாக கடன் வழங்க இந்தியன் வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
மேலும்,புதிய தொழில் தொடங்குவோர், பெண்கள் தொழில் முனைவோர், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன் மற்றும் வணிகக் கடன் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகள் குறித்த விழிப்புணர்வும் முகாமில் ஏற்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயன் வங்கி சேவைகளை இந்தியன் வங்கி வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த மெகா கடன் முகாமின் மூலம் நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு கடன் ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், தொழில் வளர்ச்சி மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் இது ஊக்கமளிக்கும் என இந்தியன் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.