April 30, 2026
கோவையில் முதல் முறையாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக “CSI Edu Connect 2026” என்ற கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி வரும் மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஆல்சோல் சர்ச் வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் தனிநபர் வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சிக்கான போஸ்டர் வெளியீட்டு விழா கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபை (CSI) கோவை திருமண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டல பிஷப் பிரின்ஸ் கால்வின் போஸ்டரை வெளியிட்டார்.நிகழ்ச்சியில் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி இயக்குநர் டாக்டர் அருமைராஜ், பொருளாளர் அமிர்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்வி சொற்பொழிவாளர் ஜெயபிரகாஷ் காந்தி பங்கேற்று, கல்லூரி மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிஷப் பிரின்ஸ் கால்வின் கூறுகையில்,
கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சிஎஸ்ஐ திருச்சபை தொடர்ந்து கல்விச் சேவையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். குறிப்பாக மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் பெற உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், “CSI Edu Connect 2026” நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் பங்கேற்று பயனடைவார்கள் என்றும், அனைத்து மதத்தினரும் இதில் இலவசமாக கலந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.