September 16, 2025
தண்டோரா குழு
கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற மாரத்தானின் மூன்றாம் பதிப்பு நடைபெறவுள்ளது.
கோயம்புத்தூர் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை,இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில்,செப்டம்பர் 28-ஆம் தேதி “ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’என்ற விழிப்புணர்வு மாரத்தானை நடத்துகிறது.செப்டம்பர் மாதம் குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும், செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் இதயக் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் சரியான சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் முற்றிலுமாக அவர்களை குணப்படுத்த இயலும்.இதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியம்.எனவே தான் பொதுமக்கள் அனைவரும் குழந்தைகள் புற்றுநோய் மற்றும் குழந்தைகளின் இதய குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக, செப்டம்பர் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 மணிக்கு கோவை, பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில் இந்த மாரத்தான் நடைபெறவுள்ளது.
மூன்று வெவ்வேறு பிரிவுகளில் இந்த மாரத்தான் நடைபெறவுள்ளது.எல்லா வயதினருக்கும் 1 & 3 கி.மீ. இதில் குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஒன்றாக ஓடலாம்.12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கும்,18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் 5 கிமீ ஓட்டம் உள்ளது. மற்றும் 10 கி.மீ. இதில் 18 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ளலாம்.
மேலும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஒரு பிரிவாக இதில் கலந்து கொள்ளலாம். 5 மற்றும் 10 கிமீ பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு,ரொக்க பரிசு தொகை ரூ.75,000 அறிவிக்கப்பட்டுள்ளது. மாரத்தான் கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று (16-ந்தேதி) ஜி.கே.என்.எம் மருத்துவமனை வளாகத்தில் மாரத்தான் டி-சர்ட் மற்றும் பதக்கத்தின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது, ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசுவாமி கலந்து கொண்டு மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.