June 14, 2025
தண்டோரா குழு
கோவையின் சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக,கரூர் வைஸ்யா வங்கி மற்றும் விஜிஎம் அறக்கட்டளை இணைந்து,கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள 150 படுக்கைகள் கொண்ட விஜிஎம் பல்நோக்கு மருத்துவமனையில் “கேவிபி–விஜிஎம் அறக்கட்டளை இரத்த வங்கி”யை உலக இரத்ததானம் செய்பவர்கள் தினத்தில் திறந்து வைத்தது.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பன், ஐ.ஏ.எஸ் மற்றும் கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இரத்த வங்கியை தொடங்கி வைத்தனர்.
விஜிஎம் மருத்துவமனையின் தலைவர் மற்றும் விஜிஎம் இரத்த வங்கி திட்டத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் ,விஜிஎம் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் எலும்பியல் துறைத் தலைவருமான டாக்டர் சுமன், விஜிஎம் மருத்துவமனையின் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் தலைவர் டாக்டர்.மித்ரா பிரசாத், மருத்துவர்கள்,செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகிண்டனர்.
தமிழ்நாடு ஆண்டுதோறும் சுமார் 8.93 லட்சம் யூனிட்கள் இரத்தத்தை சேகரிக்கிறது. கோவையில் மட்டும் 750-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட உள்நோயாளர் படுக்கைகள் உள்ளன.தன்னார்வ இரத்ததான விகிதங்கள் போதுமான அளவில் இருக்கின்றன என்றாலும் அவசர நிலைகள்,அதிர்ச்சி சம்பவங்கள் மற்றும் அரிதான இரத்த வகைகளுக்கான நிலையான பற்றாக்குறை இப்பகுதியில் காணப்படுகிறது.
இந்த இடைவெளியை நீக்குவதற்காக, தொழில்நுட்ப முன்னேற்றம், பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு இயக்கங்கள் மூலம் இந்த புதிய இரத்த வங்கி செயல்படுகிறது.
1,800 சதுர அடிப் பரப்பளவிலான இந்த வசதி, பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறனுக்கான உயர்ஒழுங்குமுறை தரநிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இரத்த சேகரிப்பு, கூறுப் பிரிப்பு, அபெரெசிஸ், சேமிப்பு மற்றும் பரிசோதனைக்கான மேம்பட்ட உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது கோயம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள நோயாளிகளின் அவசர மற்றும் வழக்கமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட உள்ளது. தீவிர சிகிச்சை, அறுவை சிகிச்சைகள்,புற்றுநோயியல், ரத்தக் கசிவு கோளாறுகள் மற்றும் மகப்பேறு அவசர நிலைகளில் இது முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என, மருத்துவ இயக்குநரும் எலும்பியல் துறைத் தலைவருமான டாக்டர் சுமன் கூறினார்.
இந்த முயற்சி,புகழ்பெற்ற விஜிஎம் மருத்துவமனையின் மருத்துவ சிறப்பும், கரூர் வைஸ்யா வங்கியின் வலுவான சமூக அர்ப்பணிப்பும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் ஒரு சமூக பொறுப்பு திட்டமாகும். இது கோவையில் சுகாதார பாதுகாப்பு மீள்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக விளங்குகிறது.
கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு கூறியதாவது:
“கோயம்புத்தூரின் சுகாதார உள்கட்டமைப்பு வேகமாக வளர்ந்துவருவதால், பாதுகாப்பான இரத்தத்தை பெறுவதை உறுதி செய்வது முன்னெப்போதையும் விட முக்கியமானது. இன்று கேவிபி–விஜிஎம் அறக்கட்டளை இரத்த வங்கியின் திறப்பு விழாவும், எங்கள் விரிவான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு திட்டமான கேவிபி ஆரோக்கிய திட்டத்தின் முறையான தொடக்கமும், உடனடி தேவைகள் மற்றும் நீண்டகால சமூக நல்வாழ்வை ஆதரிப்பதில் எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.”
செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜிஎம் மருத்துவமனையின் தலைவர் மற்றும் விஜிஎம் இரத்த வங்கி திட்டத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் கூறியதாவது:
“இந்த இரத்த மையம் வெறும் மருத்துவ வசதி மட்டுமல்ல; தன்னார்வ இரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு சிறந்த முயற்சியாகும். அதிகரித்துவரும் பாதுகாப்பான இரத்தத்தின் தேவையுடன், கோவை மக்களுக்கு இந்த வசதியை கொண்டுவருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இரத்தம் இல்லாததால் எந்த உயிரும் இழக்கப்படக்கூடாது என்பதையே உறுதிசெய்வதே எங்கள் இலக்கு. நவீன உபகரணங்கள், பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்கள் மற்றும் 24/7 கிடைக்கும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், இந்த மையம் கடைசி நேர இரத்த பற்றாக்குறையை நீக்கி, நோயாளிகளின் நலனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது” என்றார்.
இந்த தொடக்க நிகழ்வில், கரூர் வைஸ்யா வங்கி ஊழியர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்ற தன்னார்வ இரத்ததான முகாமும் நடைபெற்றது. சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இவ்வகை முயற்சிகள், வங்கியின் சமூக நலத்திற்கான அர்ப்பணிப்பை வலியுறுத்துகின்றன.
“இரத்தம் கொடுங்கள், நம்பிக்கை கொடுங்கள் — ஒன்றாக உயிர்களை காப்போம்” என்ற பரப்புரை திட்டத்திற்கான தொடக்கமாக, டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் தலைமையில் ஒரு பிரச்சார நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தன்னார்வ இரத்ததானம், நன்கொடையாளர் விழிப்புணர்வு, இரத்ததானத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கூறுப் பிரிப்பின் முக்கியத்துவம் ஆகியவை இதில் மையமாக இருப்பதாக, டாக்டர் மித்ரா பிரசாத், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் தலைவர் கூறினார்.
மாதந்தோறும் இரத்ததான முகாம்கள், பொது விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் நன்கொடையாளர்களை கௌரவிக்கும் பாராட்டுச் சுவர் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.