May 10, 2025
தண்டோரா குழு
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், தமிழக ரசிகர்கள் தமக்கு எதிர்பாராத அளவு மிகப்பெரிய வரவேற்பை அளித்திருப்பதாக நடிகை பிரியா வாரியர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், தற்போது உருவாகி வரும் ரீ கிரியேட் செய்யப்பட்ட பாடல்கள் வளர்ந்து வரும் நடிகைகளுக்கு பேருதவியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள பார்க் தொழில்நுட்ப கல்லூரியின் Zero G 25 விழாவில் பங்கேற்பதற்காக வந்த நடிகை பிரியா வாரியர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
“நான் கல்லூரி மாணவியாக இருந்தபோது கல்லூரி விழாக்களில் பங்கேற்க இயலவில்லை.அதனால்,தற்போது இதுபோன்ற விழாக்களில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது,”என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் அஜித் குமாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது படத்தில் நடித்தது மிகப்பெரிய அனுபவம். அஜித் மட்டுமின்றி, ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஒட்டுமொத்த குழுவினரும் எனக்கு சிறந்த ஒத்துழைப்பு அளித்தனர்.
மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளுமே எனக்குத் தெரியும் என்பதால், படப்பிடிப்பின் போது எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. தமிழ் மொழி எனக்கு மிகவும் பிடிக்கும்.’குட் பேட் அக்லி’ படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தாலும்,தமிழக மக்கள் எனக்கு எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்துள்ளனர்,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், ரீ கிரியேட் செய்யப்படும் பாடல்கள் குறித்து கேட்டபோது,”அவை வளர்ந்து வரும் நடிகைகளுக்கு ஒரு பெரிய பலமாக அமைகின்றன. புதிய கலைஞர்களுக்கு அது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது,” என்று அவர் கூறினார்.’குட் பேட் அக்லி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, தமிழில் நிறைய கதைகளைக் கேட்டுள்ளதாகவும், அதிக அளவிலான படங்களில் நடிக்க இருப்பதாகவும் நடிகை பிரியா வாரியர் அப்போது குறிப்பிட்டார்.
பின்னர் நடைபெற்ற கல்லூரி விழாவில், ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு மாணவர்களுக்கு மத்தியில் உற்சாகமாக நடனமாடினார். தனது மலையாளப் பட பாணியில் கல்லூரி மாணவர்களுக்கு முத்தம் கொடுத்த அவரது செயல், அங்கிருந்த மாணவர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. பின்னர் கல்லூரி முதல்வர் அனுஷா ரவி பிரியா வாரியருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.