July 12, 2017 தண்டோரா குழு
ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
” தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று (11.7.2017) தலைமைச் செயலகத்தில், ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அவர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை வழங்கினார்கள்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய நாட்டின் சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்றதோடு, பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய ஸ்குவாஷ் விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று, தற்போது இந்தியாவின் முதல்நிலை விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்கிறார்.
ஜோஷ்னா சின்னப்பா அவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், அவரது திறனை சிறப்பாக பயன்படுத்தும் வகையிலும், அவர் தமிழ்நாடு முதலமைச்சர் .எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு நேரில் வந்து கோரிக்கை அளித்ததன் பேரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை விளையாட்டு அலுவலர் பதவிக்கு நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.