October 22, 2018
தண்டோரா குழு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியரை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கண்ணன் என்பவர் கணித ஆசிரியராக உள்ளார்.இவர் ஆயுதபூஜை விடுமுறைக்கு முன் பத்தாம் வகுப்பு மாணவியை சிறப்பு வகுப்புக்கு அழைத்து அவரது ஆடையை விலக்க சொன்னதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு செல்லமாட்டேன் என பெற்றோரிடம் கூறியுள்ளார்.அப்போது,மாணவி நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில்,விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளி திறந்ததும் 150க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது வகுப்பறையில் கண்ணன் பாடம் எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த மாணவியின் உறவினர்கள் வகுப்பில் இருந்த மாணவர்கள் முன் அவரை சரமாரியாக தாக்கினர்.இதையடுத்து,தலையில் பலத்த காயத்துடன் செங்கம் அரசு மருத்துவமனையில் ஆசிரியர் கண்ணன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.