November 28, 2018
தண்டோரா குழு
உலக நீதிமன்றத்துக்கே சென்றாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனதை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம்,நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும்,ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து,இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு நடத்தினார்.ஆய்வு நடத்தி அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் மூன்று தினங்களுக்கு முன்பாக இந்த குழு தாக்கல் செய்தது.48 தனித்தனி சீலிடப்பட்ட கவர்களில் நிலத்தடி நீர்,காற்று மாசு,சுற்றுப்புறச்சூழல் மாசு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததற்கான அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில்,இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது,தருண் அகர்வால் குழு வழங்கிய பரிந்துரைகள் தெரியவந்தது.அதில்,ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உரிய காரணம் இல்லை.ஸ்டெர்லைட் ஆலையிடம் தமிழக அரசு விளக்கம் கேட்கவில்லை.ஸ்டெர்லைட் ஆலையின் நியாயத்தை கேட்காமல் தமிழக அரசு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.நிலத்தடி நீர்,காற்று மாசு ஆகியவற்றை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து ஆய்வு செய்யலாம் என தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தருண் அகர்வால் தாக்கல் செய்த அறிக்கையால் தமிழக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பா.ம.க. நிறுவனா் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,“ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்க முடியாது என வல்லுனர் குழு அறிக்கை தாக்கல்.இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான்.நான் முன்பே கூறியது தான்.புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி. உலக நீதிமன்றத்துக்கே சென்றாலும் ஆலையை திறக்க முடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர்” இவ்வாறு கூறியுள்ளார்.