September 7, 2018
தண்டோரா குழு
திரையரங்குகளில் உணவுப் பொருள்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு தொழிலாளர் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் அதன் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து,தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் 335 திரையரங்குகளில் உதவி ஆணையர்கள் சோதனை நடத்தினர்.இந்த ஆய்வில் உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்ற 72 கேண்டீன் உரிமையாளர்கள் மீதும்,38 தியேட்டர்கள் மற்றும் 4 உணவு உற்பத்தி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
மேலும்,கூடுதல் விலைக்கு விற்றது,தேதியில்லாமை போன்றவற்றிற்காக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில்,திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாலையோர கடைகள்,பேருந்து நிலையங்கள்,ரெயில் நிலையங்கள் ஆகிய இடங்களிலும் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் அளவு குறைத்து விற்று மோசடி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.மேலும்,எம்.ஆர்.பி-க்கு அதிகமாக விற்கும் நிறுவனங்கள் மீது TN-LMCTS என்ற செயலி மூலம் புகார் அளிக்கலாம் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.