September 5, 2018
தண்டோரா குழு
இந்திய முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். ஆசிரியா் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“ஆசிரியராக பணியை தொடங்கி,தமது கடின உழைப்பினாலும்,நற்சிந்தனையாலும் இந்திய குடியரசுத் தலைவராக உயர்ந்து,நமது தாயகத்தின் சிறப்பைத் தரணிக்கு உணர்த்திய தத்துவமேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.அத்துடன்,இந்நன்நாளில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்கிடும் கல்வியை இளம் தலைமுறையினருக்கு கற்பித்து,அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் ஆசிரியப் பெருமக்களின் சேவை மென்மேலும் சிறக்க வேண்டுமென வாழ்த்தி,அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.ஆசிரியர் பணி சிறக்கட்டும்! அறிவோங்கித் தமிழ்நாடு உயரட்டும்!” இவ்வாறு தெரிவிவ்துள்ளர்.