September 5, 2018
தண்டோரா குழு
நாட்டின் விடுதலைக்காக செக்கிழத்த வ.உ.சி.யின் 147வது பிறந்தநாளை கொண்டாடும் நேரத்தில்,தமிழகத்தில் வெட்ககேடான நிகழ்வு நடந்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சி.யின் செக்கிற்கு அஞ்சலி செலுத்த வந்தபோது செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,
“வரலாற்றில் முதல் முறையாக அதிகாரத்தில் உள்ள டி.ஜி.பி.யின் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெறுவதாகவும்,காவல்துறை அதிகாரிகள் நிறைய பேர் உள்ள போதிலும்,பதவியிலிருந்து ஓய்வுப்பெற்ற ஒருவரை மீண்டும் பதவி நீட்டிப்பு செய்வதன் அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் தொடர்ந்து சோதனை நடந்தும் பதவியில் நீடிப்பதாகவும்,ஏதோ ஒரு நாட்டில் நடப்பது போல் இந்த சோதனைகளை முதல்வர் பார்வையாளராக பார்ப்பது கண்டனத்துக்கு உரியது என்றார்.
ஏற்கனவே நடந்த சோதனையின் போது ரூ.28 லட்சம் பணத்தை தனி கவரில் போட்டதற்கான ஆதாரம்,குவாரியில் அளவுக்கு அதிகமான கல் வெட்டியதற்கான ஆதாரங்கள் என பல ஆதாரங்கள் கைப்பற்றப்பட்ட போதிலும்,இந்த அரசு பதவி விலகுவதாக இல்லை என்றும்,மக்கள் போராட்டம் மூலம் தான் தீர்வுக்கான முடியும் என்றார்.
முதல்வர்,துணை முதல்வர்,அமைச்சர் என ஊழல் புகாரில் சிக்கியுள்ளதால் இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருந்தால் பதவியில் இருந்திரலாம் என்று எண்ணத்தில் தமிழக அரசு மத்திய மோடி அரசிற்கு தலையாட்டும் பொம்மையாக உள்ளதாக குற்றசாட்டினார்.மத்திய அரசு தமிழக அரசை நிர்பந்திக்கவும்,கட்டாயப்படுத்துவதற்கும் இந்த சோதனையை அரசியல் தேவைக்கான சோதனையாக இருந்தால் பிரதமர் தான் மிகப்பெரிய குற்றவாளி என்றும் சாடினார்.
நிலத்தின் அடியில் உள்ள எரிவாயு,எண்ணெய் வளங்களை தனியார் நிறுவனங்களுக்கு மொத்தமாக குத்தகை விடும் வகையில் ஏராளமான மாற்றங்கள் செய்து கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளதால்,ஒரு முறை அனுமதி வாங்கினால் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் பூமிக்கு அடியில் உள்ள வளங்களை அனுபவிக்கலாம் என்ற நிலை நாட்டுக்கோ,மக்கள் நலனுக்கு உகந்ததில்லை என்றார்.
இந்தியாவில் உள்ள மொத்தம் 55 இடங்கள் அடையாளம் கண்டு,41 இடங்களுக்கு வேதாந்தா நிறுவங்களுக்கு நிலத்தில் அடியில் உள்ள வளங்களை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும்,அதில் தமிழகத்தில் 2 வேதாந்தாவிற்கும் ஒன்று ஓ.என்.ஜி.சி.க்கும் கொடுக்கப்பட்டுள்ளதன மூலம் வேதாந்தா நிறுவனம் மோடிக்கு நெருக்கமானது என்பதை உணர முடியும் என்றார்.
மீத்தேன் திட்டத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தடை விதித்திருந்தை சுட்டிக்காட்டியவர்,கடற்கரையில் உள்ள எண்ணெய் எடுப்பதற்கு அனுமதி அளித்துள்ளதால் கடற்கரை வளங்களை அழிக்கப்படும் சூழல் உள்ளதாகவும்,ஓ.என்.ஜி.சி. இந்த எண்ணெய் வளத்தை எடுத்து தனியார் (ரிலையன்ஸ்) நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் தருவதற்கே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறினார்.
மேலும்,கோவை மத்திய சிறைக்குள் உள்ள வ.உ.சி.யின் செக்கை அனைவரும் அறிந்துக் கொள்ளும் வகையில் வ.உ.சி.பூங்காவில் மக்கள் பார்வைக்கு வைத்து பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்”.இவ்வாறு பேசினார்.