September 7, 2018
தண்டோரா குழு
மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூத்துக்குடி கந்தன்காலனியை சேர்ந்தவர் சாமி.இவருடைய மகள் சோபியா (வயது 28).இவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.கடந்த 3-ந் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த போது பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.இதனால் அதே விமானத்தில் பயணம் செய்த பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும்,சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அப்போது,சோபியாவிடம் இருந்த பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பாஸ்போர்ட் பழைய பாஸ்போர்ட் என்பதால்,சோபியாவின் புதிய பாஸ்போர்ட்டுடன்,இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அவருடைய தந்தை சாமிக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“மாணவி சோபியா கனடா சென்று மேற்படிப்பினை தொடர தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வேண்டும்.”பொதுவாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை” என்பதை உணர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்களும் தான் அளித்த புகாரை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது.நீதிமன்றமே நிபந்தனை விதிக்காத நிலையில்,காவல்துறை ஆய்வாளர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யக்கோரி “சம்மன் அனுப்பி” மாணவியை பழிவாங்க துடிப்பது வேதனையளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.