October 30, 2018 தண்டோரா குழு
மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘சர்கார்’.கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில்,வரலட்சுமி சரத்குமார்,ராதாரவி,யோகி பாபு,பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு,ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில்,‘சர்கார்’ படத்தின் கதை,தன்னுடைய ‘செங்கோல்’ கதையில் இருந்து திருடப்பட்டது என்று உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு கடந்த 25ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது வாதிட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்,30 ஆம் தேதியன்று பதில் மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கின் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்த நீதிபதி,படத்திற்கு தடை விதிக்கவும் மறுத்து விட்டார்.இதற்கிடையில்,சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஓன்று தான் என எழுத்தாளர் சங்கத் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இது பெரும்
சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.விசாரணையை நேரில் பார்ப்பதற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்யராஜ் நேரில் வந்திருந்தனர்.இந்த வழக்கில் சன் பிக்சர்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.படத்திற்கான கதை என்று டைட்டில் கார்டில் நன்றி ராஜேந்திரன் என்று குறிப்பிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,வருண் என்கிற ராஜேந்திரனுக்கு ரூ.30 லட்சம் கொடுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் படத்தை வெளியிட தடை இல்லை என்பதும் தெளிவாகிறது.