November 23, 2018
தண்டோரா குழு
சபரிமலையில் பிறப்பிக்க பட்டு இருந்த 144 தடை உத்தரவை மேலும் 4 நாட்கள் நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலையில் உலகப்புகழ்பெற்ற ஐய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு நாடுமுழுவதும் பல்வேறு தரப்புகளில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் உத்திரவிட்டு இருமுறை கோவில் நடை திறக்கப்பட்ட போதும் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை.எனினும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என்று மாநில அரசு உறுதிபட கூறியதுடன்,சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.இதனால் சபரிமலையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.குறிப்பாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.இதற்கிடையில்,கோவில் மண்டல பூஜை,மகர விளக்கு பூஜைக்காக கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு. வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும்.
இதனிடையே,சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாஜக,ஆர்எஸ்எஸ் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இதையடுத்து,சபரிமலை,நிலக்கல்,பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த தடை நேற்று இரவுடன் முடிவுக்கு வந்த நிலையில்,தடையை நீட்டிக்க கேரள காவல்துறையினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து 144 தடை உத்தரவை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி. நுவா உத்தரவிட்டுள்ளார்.