November 26, 2018
தண்டோரா குழு
சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
தமிழக கோவில்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் துப்பு துலக்கி வருகிறார்கள்.இதற்கிடையில்,இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவித்தது.பொன்.மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையில் திருப்தி இல்லை என்றும் அரசு தெரிவித்தது.இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேலுக்கும்,தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,தனக்கு எதிராக யாரோ சதி செய்வதாக அஞ்சுவதாக பொன் மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.மேலும்,சிபிசிஐடி போலீசாரும் தன்னிடம் விசாரணை நடத்தியதாகவும் அவர் கூறி இருந்தார்.இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம்,நீதிமன்ற உத்தரவு இல்லாமல்,போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்காமல்,ஐஜி.பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.பின்னர் விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.