• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக தேர்தலில் பணநாயகம் தான் வெல்லும்: ராமதாஸ்

October 18, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை நடத்துவதில் சீர்திருத்தம் கொண்டு வரப்படாத நிலையில், தேர்தலில் மீண்டும் பணநாயகம் தான் வெல்லும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் ஒத்திவைக்கப்பட்ட சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அவ்விரு தொகுதிகளுக்கான தொகுதி தேர்தல்களும், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலும் நவம்பர் மாதம் 19-ந் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய வரலாற்றிலேயே வாக்காளர்களுக்குப் பணம், பரிசுகள், மது ஆகியவற்றை வழங்கியதற்காக 3 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பெருமை இந்த இரு தொகுதிகளுக்கே உண்டு.

இரு தொகுதிகளிலும் நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை, ஓட்டுக்குப் பணம் என்ற நடைமுறை சீரழித்தது. குறிப்பாக அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி, தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி ஆகிய இருவருமே பணபலம் மிக்கவராக இருப்பதால் அத்தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பையும் மீறி பணம் விளையாடியது.

மேற்கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மே மாதம் 27-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தேர்தல் ஆணையமே கூறியிருக்கிறது. அது மட்டுமின்றி, இந்த இரு தொகுதிகளிலும் தற்காலிகமாகத் தேர்தலை ஒத்திவைப்பதால், களச்சூழலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும், காலப்போக்கில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்ட பிறகு தேர்தல் நடத்தப்படும் என்றும் ஆணையம் கூறியிருந்தது.

இத்தகைய நிலையில், இப்போது இரு தொகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கான சூழல் நிலவுகிறது என்ற முடிவுக்கு ஆணையம் எந்த அடிப்படையில் வந்தது என்பது தான் மில்லியன் டாலர் வினாவாகும்.

திருப்பரங்குன்றத்திலும் பணத்தை முதலீடு செய்து வாக்குகளை அறுவடை செய்ய அக்கட்சிகள் தயாராக உள்ளன. மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நியாயமாக நடத்த ஒத்துழைப்போம்; ஓட்டுக்குப் பணம் தரமாட்டோம் என்று தேர்தல் ஆணையத்திடமோ அல்லது இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் சென்னை உயர் நீதிமன்றத்திலோ இரு கட்சிகளும் வாக்குறுதி அளிக்கவில்லை.

இத்தகைய சூழலில் இந்த தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் என நம்புவது மூடத்தனமே.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக அரவக்குறிச்சி தொகுதியில் 58 வழக்குகளும், தஞ்சாவூரில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

இவற்றுக்கெல்லாம் முடிவு ஏற்படாத நிலையில், இரு தொகுதிகளுக்கும் தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்திருப்பது இன்னொரு ஜனநாயகப் படுகொலை நடப்பதற்கும், மேலும் ஒரு முறை பணநாயகம் வெற்றி பெறவும்தான் வழிவகுக்கும்.

ஒருவேளை இந்த தேர்தல்களை நியாயமாக நடத்த வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் உண்மையான நோக்கமாக இருக்குமானால், அதை உறுதி செய்வதற்காக தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் ஓட்டுக்குப் பணம் கொடுத்த அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இரு தொகுதிகளிலும் 10 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு தேர்தல் பார்வையாளரையும், ஒரு கம்பெனி மத்திய துணை இராணுவப் படையையும் 26-ம் தேதி முதல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

தஞ்சாவூர், கரூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களைத் தேர்தல் பணியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தலைமை தேர்தல் அதிகாரியாக வெளிமாநிலத்தவரை நியமிக்க வேண்டும்.

வாக்காளர்களுக்கு ஓட்டுக்குப் பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக தேர்தல் ஒத்தி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்க வேண்டும். இவை சட்டப்படியோ, நடை முறைப்படியோ சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையம் கூறினால், இவற்றை சாத்தியமாக்குவதற்கான தேர்தல் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அதுவரை தஞ்சாவூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தல்களைக் காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

மேலும் படிக்க