• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படகர்கள் நிகழ்த்தும் சாம்பல் வரையும் விழா

November 16, 2018 தண்டோரா குழு

படகர்களின் புத்தாண்டாகக் கருதப்படும் படகர்களின் மாதமான ‘தய்’ மாதத்தில் (நவம்பர்) படகர்கள் நிகழ்த்தும்,’சக்கலாத்தி’ விழாவின் ஒரு அங்கம் ‘பூதிபராவ ஹப்பா’ எனும் சாம்பல் வரையும் விழா.

சாம்பலை படகர்கள் ‘பூதி’ என்று அழைக்கின்றனர்.அடுப்பின் சாம்பலைப் பல்வேறு நிலையில் பயன்படுத்தும் படகர்கள் சடங்கு நோக்கில் ‘சக்கலாத்தி’ விழாவில் பயன்படுத்துகின்றனர்.

‘ஹெர்பஷ்’ வைரஸால் ஏற்படும் ‘ஆனேகிசி’ எனப்படும் தோலில் உண்டாகும் கொப்பளத்திற்குச் சாம்பலைக் கொண்டு படகர்கள் மேற்கொள்ளும் மருத்துவம் சிறப்பு வாய்ந்தது.

சக்கலாத்தி விழாவில் காப்பு தாவரங்களை இட்டப்பின்பு,அன்று காலை வீட்டின் அடுப்பிலிருந்து ‘கோக’ என்ற அளவையிலோ,’பூதி குக்கே’ எனும் இந்தச் சடங்கிற்காக மட்டும் பயன்படுத்தும் சிறிய கூடையிலோ எடுத்து வைத்த சாம்பலைக்கொண்டு,ஆண்கள் தம் பாரம்பரிய உடையணிந்து வீட்டின் முற்றத்தில் ‘ஒத்து’ (சூரியன்),’எரெ’ (பிறைநிலவு),’திங்குவா’ (முழு நிலவு),ஏர்,’நேகிலு’ (மாடுகளுக்கான நுகத்தடி),’எம்மே’ (எருமை),’கூ’ (உழும் இரும்பு முனை),’கொம்பு’ (எருமை கன்றுகளை கடும் மரத்தடுப்புத் தறி) போன்றவற்றின் படங்களை வரைகின்றனர்.

இந்த மரபார்ந்த பொருள்களுடன் இன்று கத்தி,குடை,ஏணி போன்றவற்றையும் வரைகின்றனர்.இவை அனைத்தும் வேளாண்மை மற்றும் கால்நடை பாதுகாப்பு தொடர்புடையன.

தம் மரபு வாழ்வின் குறியீடாக விளங்கும் இச்சடங்கினைப் படகர்கள் நிகழ்த்துவதற்கான நோக்கத்தினைச் சொல்கின்றது “சத்த ஹெத்தப்ப பந்து உத்த எத்த காத்தனா” (மேலுலகத்தில் உள்ள பாட்டனார் வந்து உழவு மாடுகளைக் காப்பர்) என்ற படக முதுச்சொல்.’சக்க’ என்றால் படகமொழியில் மேல் உலகம் (சொர்க்கம்) என்று பொருள்.’ஆத்தி’ என்பது வரவேற்பது.

மறுமை உலகில் உள்ள தம் முன்னோர்களை வரவேற்பதே இந்தச் சடங்கின் நோக்கமாகும்.படகர்களின் ‘சக்க’ என்றச்சொல் “உறங்குவது போல் சாக்காடு உறங்கி விழிப்பதுபோல் பிறப்பு” எனும் திருக்குறளில் உள்ள மரணத்தைக் குறிக்கும் சாக்காடு என்ற சொல்லுடன் இணைத்து எண்ணத்தக்கது.

தம் முன்னோர்கள் வந்து கண்டு மகிழ வேண்டும்,தம் மரபை பின்பற்றும் நிலையைக்கண்டு உவந்து தம்மைக் காக்க வேண்டும் என்பது கருதி படகர்கள் நிகழ்த்தும் சாம்பல் வரையும் விழா படகர்களின் கலை உணர்விற்கும் சிறந்த சான்றாகும்.

சடங்குடன் உட்செறிந்த இந்த கலைத்தன்மை வியப்பிற்குரிய, தனித்துவமான ஒன்றாகும்.தம் முன்னோர்களை வரவேற்க படகர் இடும் சாம்பல் ஓவியத்தில் எஞ்சி நிற்கின்றது தன் முன்னோர் கடைந்த நெருப்பின் கனல்.

மேலும் படிக்க