September 27, 2016
தண்டோரா குழு
ஐ.நா பொது சபையில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா பேச்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று உரையாற்றிய சுஷ்மா தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என்றார். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு உலக வரைப்படத்தில் இடமில்லை என்றும் சுஷ்மா பேசினார்.
மேலும் பாகிஸ்தானிடம் இந்தியா நட்பாக இருக்க விரும்புகிறது என்று கூறிய அவர், அதற்கு பரிசாக உரி மற்றும் பதான்கோட்டு தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தான் தமது சுயரூபத்தை வெளிப்படுத்தி வருவதாக வேதனை தெரிவித்தார்.
காஷ்மீரை அபகரிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு காஷ்மீர் கிடைக்கும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கனவு காண வேண்டாம் என்றும் சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை விடுத்தார்.
இவரது பேச்சிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், சரியான நேரத்தில்,காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட இந்தியா சந்தித்துவரும் பல்வேறு சவால்களில் இந்தியாவின் குரலை ஐ.நா.,வில் சுஷ்மா சுவராஜ் ஓங்கி ஒலித்துள்ளதாகக் கூறியுள்ளார்.