November 26, 2018
தண்டோரா குழு
புயல் பாதித்த நாகை,திருவாரூர் பகுதிகளில் நாளை மறுநாள் (நவ.28) முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்கிறார்.கஜா புயல் கடந்த 16-ம் தேதி அதிகாலை வேதாரண்யம்- நாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது.120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடந்த அந்த புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர்,நாகை,புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.தென்னை மரங்கள்,வாழை,கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன.இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.தற்போது தொடர்ந்து மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20-ம்தேதி பார்வையிட்டார்.புதுக்கோட்டை மற்றும் தஞ்சையில் ஆய்வு செய்த முதல்வர்,மழை பெய்ததால் தனது பயணத்தை ரத்து செய்து சென்னை திரும்பினார்.இதையடுத்து,டெல்லி சென்ற முதல்வர் பழனிச்சாமி பிரதமரை சந்தித்து புயல் பாதிப்பு குறித்து எடுத்துக் கூறி,தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில்,முதல்வர் ஹெலிகாப்டரில் சென்று புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாற்றினர்.இந்நிலையில்,புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விடுபட்ட இடங்களை பார்வையிட முடிவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,நாளை இரவு ரெயில் மூலம் புறப்பட்டுச் செல்கிறார். நாளை மறுநாள் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறார்.பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளார்.