August 16, 2018
தண்டோரா குழு
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால்,சில நாட்களுக்கு அணையின் நீர் மட்டத்தை 138 அடிக்கு தமிழக அரசு குறைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 142 அடியை எட்டியுள்ளது.இதனால்,பாதுகாப்பு கருதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார்.
அதற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால் அணையின் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என பதிலளித்தார்.இதற்கிடையில்,முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டத்தை குறைக்ககோரி இடுக்கி பகுதியை சேர்ந்த ரசுல் ஜாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது,மனுதாரர் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் முல்லைப் பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.பழைய முல்லைப்பெரியாறு அணையால்,இடுக்கி மாவட்ட மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருவதாகவும்,அந்த அணையில் இருந்து நீரை திறந்துவிடுவதில் தமிழக அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பில்லாமல் இருப்பதாக கற்பனையில் கூறாதீர்கள்.சரியான ஆதாரங்களுடன் வாதங்களை முன் வையுங்கள் எனக் கூறினார்.
மேலும்,முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்,நீர் திறப்பு,பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யக்கோரி,மனுதாரர் ரசுல் ஜாய்க்கும்,துணைக் கண்காணிப்புக்குழுவுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும்,முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால்,சில நாட்களுக்கு அணையின் நீர் மட்டத்தை 138 அடிக்கு குறைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி, வழக்கை நாளை ஒத்திவைத்தது.