October 23, 2018
தண்டோரா குழு
சமூக ஊடங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள்,குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. ஹாலிவுட்டில் பிரபலமாக துவங்கிய இந்த விவகாரம் தற்போது இந்தியாவில் டிரெண்டாகி வருகிறது.
தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.இவரைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி,நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக்,இயக்குநர் சுசிகணேசன்,தியாகராஜன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.இந்நிலையில் மீடு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“மீடு இயக்கத்தை கவனித்து வருகிறேன்.பாதிக்கப்பட்டவர்களின் பெயரும்,குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரும் எனக்கு அதிர்ச்சியை தந்தது.நமது திரையுலகம் சுத்தமானதாகவும்,பெண்களுக்கு மரியாதை தரக்கூடிய இடமாகவும் பார்க்க விரும்புகிறேன்.
நானும்,எனது குழுவும் எங்களுடன் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பான முறையில் வேலை பார்க்கும் சூழலை ஏற்படுத்தி தந்துள்ளோம்.சமூகவலைதளம் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கான சுதந்திரத்தை பெற்று தந்துள்ளது.அதேசமயம் இதை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.அதை தவிர்க்க,இணையதள நீதி அமைப்பு ஒன்றை அமைப்பது நல்லது”.என பதிவிட்டுள்ளார்.