November 30, 2018
தண்டோரா குழு
மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்,காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் குடிநீர் மற்றும் மின்சார உற்பத்திக்காக இரு தடுப்பணைகள் கட்டி,நீர்மின் நிலையம் துவக்க கர்நாடக அரசு திட்டமிட்டு ரூ.5912 கோடி நிதி ஒதுக்கியது.இதற்கிடையில்,
மேகதாது அணைத் திட்டத்தை நிறைவேற்றினால்,தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட சேலம்,நாமக்கல்,கரூர்,திருச்சி,தஞ்சை,நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் நீர்வரத்து இன்றி,விவசாயிகளின் நலன் பாதிக்கக்கூடும் என்று தமிழக அரசும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கும் தொடர்ந்துள்ளது.
இந்த சூழலில்,கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான முதற்கட்ட வரைவு அறிக்கையை தயார் செய்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது.சில தினங்களுக்கு முன்பு மத்திய நீர்வளத்துறை ஆணையம் மேகதாது அணை வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.மத்திய நீர்வளத்துறை மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தற்கு தமிழக அரசு மட்டுமின்றி பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில்,மேகதாது அணை குறித்த விரிவான அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.தமிழக அரசின் கருத்தை கேட்காமல் மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக மனுவில் புகார் கூறப்பட்டுள்ளது.