November 29, 2018
தண்டோரா குழு
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டிச.4ம் தேதி திருச்சியில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முடிவு செய்துள்ளது.புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கு தமிழக அரசு மட்டுமின்றி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில்,அனைத்து கட்சி கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.இதையடுத்து,அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் கூடியது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் துவங்கிய இக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு,துரைமுருகன்,ஆர்.எஸ்.பாரதி,டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அபுபக்கர் எம்.எல்.ஏ., திராவிடர் கழகம் சார்பில் கலிபூங்குன்றன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட 9 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தலைவர்கள் பேசினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முக ஸ்டாலின்,
“தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தோழமைக் கட்சிகளுடன் விவாதிக்கப்பட்டது.போதிய நேரமில்லாததால் மற்ற கட்சிகளை அழைக்க முடியவில்லை.மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்.இந்த கூட்டத்தில் கஜா புயலினால் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் எழுந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.மேலும் மேகதாது அணை தொடர்பாக டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி திருச்சி மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.கட்சி பேதங்களை மறந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும்.டெல்டா பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் திருச்சியில் நடத்த முடிவெடுத்துள்ளோம்” என்றார்.