September 10, 2018
தண்டோரா குழு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் ஆளுநர் விடுதலை செய்வார் என மதுரை ஆதினம் அருணகிரிநாதர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
“குட்கா ஊழல் பொறுத்தவரை சி.பி.ஐ மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.ஊழல் அமைச்சர்கள் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்.எதிர்கட்சி என்ற முறையில் திமுக தன்னுடைய கடமையை ஆற்றி வருகிறது எனவும்,திமுக பலப்பட வேண்டுமென்றால் ஸ்டாலினும்,அழகிரியும் இணைய வேண்டுமெனவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் ஓபிஎஸ் ஈ.பி.எஸ் நல்லாட்சி செய்கிறார்கள்,மத்தியில் மோடியும் நல்ல ஆட்சி செய்கிறார் என கூறிய அவர்,வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பாஜகவும்,தமிழகத்தில் அதிமுக நல்ல முறையில் வெற்றி பெறும் என தெரிவித்தார்.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை ஆளுநர் நிச்சயம் விடுதலை செய்ய உத்தரவிடுவார்.
நித்தியானந்தா தரப்பிலிருந்து அச்சுறுத்தல் உள்ளதாகவும்,ஆனால் அவர் மீண்டும் ஆதீனத்தில் நுழைய முடியாது எனவும் அவர் கூறினார்.மேலும்,பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி க்குள் கொண்டு வந்து 30 ரூபாய்க்கு கொண்டு வர வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளதாகவும்,சோபியா விமானத்தில் அப்படி நடந்திருக்க கூடாது எனவும்,அதேசமயம் அப்பெண்ணை காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா போல எல்லா நடிகர்களும் வர முடியாது எனவும்,ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சர்களுக்கு பதிலாக குற்றச்சாட்டுகள் இல்லாதவர்களை முதல்வர் அமைச்சராக்குவார் எனக் கூறினார்.மேலும்,எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோவில்களில் நடைபெறும் ஊழல்களை ஒழிக்க முடியாது”. இவ்வாறு பேசினார்.