July 31, 2018
தண்டோரா குழு
உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு,சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்தது.இதையடுத்து,2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இதற்கிடையில்,உள்ளாட்சி தேர்தலை சென்ற வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்திரவிட்டது.
அப்போது,தேர்வு காலம் என்பதால் தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியது.அதன்பின் மீண்டும் நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.எனினும் இன்று வரை தேர்தல் நடத்தப்படவில்லை.
இதனையடுத்து,தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத,மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது,வாதிட்ட திமுக வழக்கறிஞர் வில்சன்,நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தவில்லை.எனவே மாநில தேர்தல் ஆணையரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து,நீதிபதி இந்திரா பானர்ஜி,உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை என மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
பின்னர்,உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.தாக்கல் செய்யாவிட்டால் அவமதிப்பை சந்திக்க நேரிடும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.