August 11, 2018
தண்டோரா குழு
கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
கேரளா மற்றும் கா்நாடகா மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது.கடந்த சில தினங்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
கேரளாவின்இடுக்கி,கோழிக்கோடு,வயநாடு,மலப்புரம்,கோழிக்கோடு,கொல்லம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு இடங்களில் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்தது.
இந்நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை ஹெலிகாப்டரில் ஒன்றாக சென்று இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவியும்,வெள்ளத்தால் வீடுகள் மற்றும் விளைநிலங்களை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.