July 31, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவகண்காணிப்பில் இருந்து வந்தார்.இதற்கிடையில்,கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து,மாநில மற்றும் தேசிய அளவில் இருந்து அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு முக்கிய பிரபலங்களும் காவிரி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி நேரில் பார்த்தார். அந்த புகைப்படத்தையும் திமுக தலைமை செயலகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில்,கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
“அதில்,முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி, 28ம் தேதி ரத்த அழுத்த குறைபாடு காரணமாக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஐசியூவில் வைத்து சிகிச்சையளித்த பிறகு அவரது உடல்நிலை சீரடைந்தது.29ம் தேதி,மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக, கருணாநிதி உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டது.மருத்துவ சிகிச்சைகளுக்கு கருணாநிதி உடல்நிலை ஒத்துழைத்ததையடுத்து,படிப்படியாக அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.வயது காரணமாக மொத்தத்தில் அவரது ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள நலிவு காரணமாக,அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீடிக்க வேண்டியது அவசியம்.கருணாநிதியின் உடல் உறுப்புகள் அனைத்தும் சிகிச்சைக்கு நல்ல வகையில் ஒத்துழைத்து வருகின்றன”.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.